Best Tamil resources

செய்!


ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார்.

நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார்.

இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும்.

முதல் படி


உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.

செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.
- Dr. David Schwartz

 விடாமுயற்சி


அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.
- Samuel Johnson.

பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.- William Feather.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill .

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
- Abraham Lincoln.

 வெற்றியாளர்


வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த
முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.
- Napoleon Hill.

அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.
- George Washington Carver.

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.
- Will Rogers.

பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.
- George Bernard Shaw.

 உயர்வு


வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
- திருவள்ளுவர்.

 அறிவு


உன்னை அறிந்தால் - நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்!!

- கவிஞர் கண்ணதாசன்.

 மனிதர்


தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி - கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் - இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?

- மகாகவி சுப்பிரமணிய பாரதி.
 

 வாழ்க்கை


என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

''தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.

''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' சிரித்தார் தாத்தா.

ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?

எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்?

அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 'ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!‘ என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

வேட்டைக்குப் போகும் யாரும் ''இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை'‘என்று புலம்பியதுண்டா?

வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!

- சுவாமி சுகபோதானந்தா.
 

 ஊக்கம்


ஊக்கமூட்டும் சில பழமொழிகள் இங்கே:

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
காய்த்த மரம் கல் அடிபடும்.
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
செய்வன திருந்தச் செய்.
சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
பதறாத காரியம் சிதறாது.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
வாழ்வும் தாழ்வும் சில காலம்.
 

 உதவி


உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்! - சுவாமி விவேகானந்தர்.

சுயமாக முன்னேறிய மனிதன் என்று ஒன்று கிடையாது. எனக்கு அதிக உதவிகள் கிட்டின. நான் கண்டுகொண்டது என்னவெனில், நீ உழைக்கத் தயாராய் இருந்தால், பலர் உனக்கு உதவத் தயாராய் இருக்கிறார்கள்.
- O. Wayne Rollins.

ஒருவனுக்கு மீனைக் கொடு; அவனுக்கு நீ ஒரு நாள் மட்டுமே உணவளித்தவனாவாய். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடு; அவனுக்கு நீ அவனது வாழ்நாள் முழுக்க உணவளித்தவனாவாய்.
- Lao Tzu
 

 

உழைப்பு = வெற்றி


துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!

கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.

எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

- சுவாமி விவேகானந்தர்.
 

 நம்பிக்கை

இது நான் சமீபத்தில் படித்து வியந்த ஒரு நிகழ்ச்சி:
தன் சிறு வயதில், வாரியார் சுவாமிகளின் ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், காலை எடுத்து விட ரூ 500 கேட்டார்.

வாரியார் சுவாமிகள், " ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் " என்று யோசிக்கலானார். காலை , மாலை என்று இருவேளைகளில் 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார்.

புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது.
 

 

வெற்றி-தோல்வி


நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே; தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும், அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும்.

உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

எந்தத் துறையையும் சார்ந்த, ஒவ்வொரு வெற்றியாளரும், சாதனையாளரும் இந்த வர்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள்: "வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு இடர்பாட்டிலும், மிகப் பெரிய அநுகூலத்திற்கான விதை ஒளிந்திருக்கிறது."
- W. Clement Stone

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.
- Albert Einstein

 பயம்


கடவுள் நம்பிக்கை உள்ளவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. உனக்குப் பயம் ஏற்பட்டால், அது கடவுள் மேல் உனக்கிருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது.
 

 பார்வை


நீ உயர்ந்து மேலே செல்லச் செல்ல, இன்னும் கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாய்த் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை. அதனால், அவர்கள் உன் முயற்சிகளைப் பற்றி எள்ளி நகையாடினால், கண்டு கொள்ளாதே.


உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு. சிறியோரே அவ்வாறு செய்வர்; மாறாக, உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர்.
- Mark Twain.

சராசரி மனிதனின் விமர்சனம், உன் நோக்கத்தைத் திசை திருப்ப அனுமதிக்காதே. நீ கனவு கண்டால், அவன் உன்னைப் பைத்தியக்காரன் என்பான்; நீ வெற்றி பெற்றால், நீ அதிர்ஷ்டசாலி என்பான்; நீ செல்வந்தன் ஆனாலோ, உன்னைப் பேராசைக்காரன் என்பான். அவனைக் கண்டுகொள்ளாதே. அவனால் உன்னை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது.
- Robert Allen.

நியாயமில்லாத விமர்சனம்கூட ஒரு விதத்தில் பாராட்டேயாகும். நீ ஒருவரின் பொறாமையைத் தூண்டிவிட்டாய் என்பதையே இது காட்டுகிறது.
- Dale Carnegie
 

 உயரம்



நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்?
 

 முயற்சி


விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.
 

 வாய்ப்பு


இது நான் சமீபத்தில் படித்த, ஒரு நண்பரின் அனுபவம்: ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.

நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.

வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.
 

 எண்ணம், சொல், செயல்


நமது சொல் அல்லது செயலுக்கு மூல காரணியாக இருப்பது நம் எண்ணமே. நாம் எதையும் சொல்லும் முன்போ, அல்லது எதையும் செய்யும் முன்போ, அதற்கான உந்துததல், முதலில் நம் எண்ணத்தில்தான் உருவாகிறது.

உங்கள் எண்ணம் பண் பட்டு இருந்தால், உங்களுக்கு கெட்ட எண்ணங்களே தோன்றாது. இதனால், உங்கள் சொல்லும், செயலும் தன்னாலேயே பண் பட்டுவிடும். இதனால், உங்கள் எண்ணங்களின் மேல் அதீதக் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.
 

 வழி


ஒரு இலக்கு நோக்கி செல்லும்போது, செல்லும் பாதையில் பல முட்புதர்களையும், விஷப் பாம்புகளையும், வேறு பல விரும்பத் தகாதவற்றையும் பார்க்க நேரிடலாம். இதனால், நம் கவனம் சிதறி, அந்தப் பொருட்களின் மேல் தெவையில்லாமல் சென்றுவிட அனுமதிக்கக் கூடாது. அந்த முட்புதர்களை வெட்டி எறிவதும், பாம்புகளை அழிப்பதும் நல்லதுதான். ஆனால், அதுவா நமது இலக்கு? இதைச் செய்வதால் வீணாவது நம் நேரம்தானே!

நம் கவனம் நமது இலக்கில் மட்டுமே இருந்து, தெவையற்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். ரோஜா மலர் முட்களோடுதான் வளர்ந்து மணம் பரப்புகிறது. ரோஜா மலரைப் பறிக்கச் செல்லும் ஒருவர், எல்லா முட்களையும் அகற்றிவிட்டுத்தான் மலரைப் பறிப்பேன் என்றால், அவர் எப்போது முட்களை அகற்றுவது; எப்போது மலர்களைப் பறிப்பது?
 
 
 

Bookmark and Share
Our popular resources :
Free English to Tamil Dictionary online Free English to Tamil Dictionary online
Free English to Hindi Dictionary online Free English to Hindi Dictionary online
Indian baby names in Tamil and English Indian baby names in Tamil and English
Free Tamil PDF eBooks for download Free Tamil PDF eBooks for download
Free Tamil Tutor matching Free Tamil Tutor matching
Tamil Test papers Tamil Test papers
Learn Tamil language online Learn Tamil language online






Copyright 2006-2010 © TamilCube, All rights reserved.